Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட 17 லட்சம் மதிப்புள்ள 205 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் கனரக வாகனங்களில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது லாரியில் பயணம் செய்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து அந்த வாகனத்தை தொடர்ந்து சோதனை செய்தபோது அதில் மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது பிடிபட்டவர்கள் சுதாகர், அபிலாஷ், சம்சீர், சுபைத் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 17 லட்சம் மதிப்புள்ள 205 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்தி வந்த வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? யாரிடம் விற்கப்போகிறார்கள்? எந்தந்த பகுதிகளில் கஞ்சா புழக்கத்தில் இருக்கிறது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அருகே ஒரே இடத்தில் 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.